தவெகவின் தலைவர் விஜய், பாஜகவுக்கு அடிமையாக செயல்படுகிறார் என்று திமுக நிர்வாகி டி.கே.எஸ். இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார். கரூர் நிகழ்வில் தன்னுடைய தவறுகள் உள்ளதால் அதைப் பற்றி விஜய் பேச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். மேலும், மெட்ரோ திட்டத்திற்கு அனுமதி மறுக்கும் பாஜகவை எதிர்த்து விஜய் எதுவும் பேசாதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
காஞ்சிபுரம் ஜேப்பியர் கல்லூரியில் விஜய் தனது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். கரூர் சம்பவத்திற்குப் பிறகு 55 நாட்களுக்கு பின் விஜய் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டதால், அவரது உரை மீது அதிக கவனம் திரும்பியது. இந்த நிகழ்வில் விஜய், அண்ணா தொடங்கிய கட்சி இன்றைக்கு எப்படி மாற்றப்பட்டிருக்கும் என்று விமர்சிக்கவும், திமுக பொய்களால் வாக்குகளைப் பெற்றது என்றும் குற்றம்சாட்டினார். தவெகவின் ஆதரவாளர்களை ‘தற்குறிகள்’ என சிலர் குறிப்பிடுவது தவறானது; இவர்கள் தமிழ்நாட்டு அரசியலில் மாற்றத்தை உருவாக்கும் ‘ஆச்சரியக்குறிகள்’ என்று அவர் கூறினார்.
இதற்கு பதிலளித்த டி.கே.எஸ். இளங்கோவன், அண்ணாவின் அரசியல் பற்றி விஜய்க்கு அறிமுகமே இல்லை என்றும் கூறினார். அண்ணா முதல்வராக வேண்டும் என்ற லட்சியத்திற்காக அல்ல, மக்களுக்காக போராடி சிறைக்குச் சென்றவர் என்பதை நினைவுபடுத்தினார். ஆனால் விஜய், முதல் தேர்தலிலேயே முதல்வர் ஆசையுடன் களமிறங்கியுள்ளார் என அவர் விமர்சித்தார். திமுக தான் அண்ணாவின் கொள்கைகளை தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிற கட்சி என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், தங்களது கூட்டத்திலேயே தவெகவினர் கொள்கைக்குப் பதவியை முன்னிலைப்படுத்துவதாக குற்றம் சாட்டப்படுகின்றனர் என்றும் இளங்கோவன் குறிப்பிட்டார். மெட்ரோ திட்டத்தை தடைசெய்த பாஜக குறித்து விஜய் ஒரு வார்த்தை கூட பேசாமல் இருப்பது சந்தேகம் எழுப்புகிறது என்றும் அவர் தெரிவித்தார். தமிழ்நாட்டின் எந்த முக்கிய பிரச்சனையையும் குறித்து விஜய் முன்வந்து பேசவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழப்பு ஏற்பட்டதற்கு விஜய் தாமதமாக வந்ததே காரணம் என்றும் கூறினார். பாஜக பற்றி விஜய் எப்படியும் விமர்சிக்காதது எதிர்மறையான கேள்விகளை எழுப்புகிறது என அவர் தெரிவித்தார்











Leave a Reply