டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு போலீசார் நாடு முழுவதும் அதிக பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், மீண்டும் பெரிய அளவில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உத்தரகாண்டின் அல்மோரா பகுதியில் உள்ள ஒரு அரசுப் பள்ளி அருகில் 161 ஜெலட்டின் குச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி மாணவர்கள் அருகே விளையாடிக் கொண்டிருக்கும்போது புதர்களில் சந்தேகமான பொருளைக் கண்டதாக முதல்வர் போலீசில் தெரிவித்தார். தகவலை அடிப்படையாகக் கொண்டு போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தியதில் ஜெலட்டின் குச்சிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதிகாரிகள் வெடிபொருட்களை கைப்பற்றியதுடன், இதற்கான மாதிரிகளும் சேகரிக்கப்பட்டன.
இந்த சம்பவம் குறித்து இந்திய வெடிபொருள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று அல்மோரா மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தேவேந்திரா பிஞ்சா தெரிவித்தார். ஜெலட்டின் குச்சிகள் பொதுவாக சாலை மற்றும் பாறை வெடித்தலில் பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள் என்பதால், இவை பள்ளி அருகே எப்படி வந்தன என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதற்குமுன்பு, டெல்லி கார் குண்டுவெடிப்பிற்கு முன் ஃபரிதாபாத்தில் 2,900 கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டிருந்தது. அந்த சம்பவத்துக்குப் பிறகு செங்கோட்டையிலும் குண்டுவெடிப்பு நடந்ததால் பாதுகாப்பு அமைப்புகள் எச்சரிக்கையாக இருந்த சூழலில், இச்சம்பவமும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி குண்டுவெடிப்பில் மருத்துவர் உமர் நபி என்ற நபர் முக்கிய குற்றவாளி என அடையாளம் காணப்பட்டுள்ளார். தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதாகவும், வெடித்துச் சிதறிய கார் அவரால் ஓட்டப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இவ்வழக்கில் போலீசார் இருவரையும் கைது செய்துள்ளனர்











Leave a Reply