இந்தியா வந்த ரஷ்ய அதிபர் புதின்… ஆனால் இந்திய உணவுகளை ஏன் தவிர்க்கிறார்? அதற்கு பின்னால் உள்ள காரணம் ஆச்சரியப்பட வைக்கிறது!

ரஷ்யா உலகின் முக்கிய சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்றாகவும், இந்தியாவுடன் நீண்டகால நெருக்கமான உறவைப் பேணும் தேசமாகவும் அறியப்படுகிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், டெல்லியில் நடைபெறும் இந்தியா–ரஷ்யா இருதரப்பு மாநாட்டில் பங்கேற்க இன்று இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்த பயணத்தின் போது அவர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசுத் தலைவர் திராவுபதி முர்முவை சந்தித்து, வணிகம், பாதுகாப்பு மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடத்த உள்ளார். குறிப்பாக, சிவில் அணுசக்தி துறையில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விஜயம் இரு நாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், புதினைச் சார்ந்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளிச்சம் கண்டுள்ளது. புதின் வெளிநாடு செல்லும் போதெல்லாம், அவருடன் ஒரு சிறப்பு “உணவுக் குழு” தனியாக பயணிப்பதும், அவரது IL-96 விமானத்தில் அவர் மட்டுமே சாப்பிடும் வகையில் ரஷ்யாவில் இருந்து உணவுப் பொருட்கள் கொண்டு வரப்படுவதும் வழக்கமாக உள்ளது. இந்த முறைவும், ரஷ்ய ட்வோரோக், பாரம்பரிய ஐஸ்கிரீம், தேன் மற்றும் பாதுகாப்பாக மூடப்பட்ட ரஷ்ய தண்ணீர் பாட்டில்கள் என அனைத்து உணவுகளும் அவருடன் வந்துள்ளன.

புதின் எங்கு சென்றாலும் அந்நாட்டு சமையல்காரர்கள் தயாரிக்கும் உணவை சாப்பிடமாட்டார் என்பது பரவலாக அறியப்பட்ட ஒன்று. 2014-ல் அவர் இந்தியா வந்தபோது மும்பை தாஜ் ஹோட்டலின் ஒரு தளம் முழுவதும் ரஷ்ய பாதுகாப்பு குழுவுக்காக ஒதுக்கப்பட்டு, அங்குள்ள சமையலறையில் இருந்த இந்திய மசாலாப் பொருட்கள் கூட அகற்றப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன. 2018-ல் கோவாவில் நடைபெற்ற உச்சிமாநாட்டின்போதும் ரஷ்ய சமையல்காரர்கள் ஹைதராபாத் ஹவுஸில் நேரடியாக தங்களது உபகரணங்களைக் கொண்டு வந்து புடினுக்கென தனிப்பட்ட உணவு தயாரித்தனர். அன்றைய விருந்தில் இந்திய உணவுகள் பல இருந்தபோதும், புதின் தனது ரஷ்ய சாலட் மற்றும் ட்வோரோக் மட்டுமே எடுத்ததாக ‘தி இந்து’ தெரிவித்தது.

2022ல் உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற SCO மாநாட்டிலும் அந்நாட்டுத் தலைவர் அவருக்கு பாரம்பரிய பிலாஃப் வழங்க முயன்றபோது, புதின் மரியாதையாக மறுத்தார்.

அவர் இப்படிச் செய்வதற்கான முக்கிய காரணம்—
புதின் வெளிநாட்டில் எடுக்கும் உணவு முழுவதும் ரஷ்யாவில் இருந்து கொண்டு வரப்பட்ட பொருட்களாலேயே தயாரிக்கப்பட வேண்டும் என்பதுதான். இது பாதுகாப்பு நடைமுறைகளின் முக்கியமான ஒரு பகுதியாகும். முன்னாள் FSO அதிகாரி ஆண்ட்ரி சோல்டடோவ் தனது “தி நியூ நோபிலிட்டி” புத்தகத்தில் இதை உறுதிப்படுத்துகிறார். புதினுடன் எப்போதும் “கையடக்க உணவு ஆய்வகம்” பயணிக்கும்; அவர்கள் ஒவ்வொரு உணவையும் உடனடியாக ஸ்பெக்ட்ரோமீட்டர் மற்றும் இரசாயனச் சோதனை கருவிகள் மூலம் பரிசோதிப்பார்கள்.

ரஷ்யா டுடே தகவலின்படி, புதின் உண்ணும் பொருட்கள் மாஸ்கோவில் உள்ள ஒரு சிறப்பு பண்ணையில் இருந்து பெறப்படுகின்றன; அங்கு பால் கறக்கும் நேரம் முதல் உணவு பொருட்கள் சேமிக்கப்படும் தருணம் வரை 24 மணி நேரமும் கண்காணிப்பு நடைபெறுகிறது. இதனால், வெளிநாட்டு ஹோட்டல்களில் உள்ளூர் சமையல்காரர்கள் தயாரிக்கும் உணவை புதின் பெரும்பாலும் தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *