பீகார் தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கான முக்கிய காரணம் இதுதான் என அவர் வெளிப்படையாக கூறுகிறார்- செல்வப்பெருந்தகை

பீகார் தேர்தல் தோல்வி: காரணங்களை விளக்கும் செல்வப்பெருந்தகை — தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை என உறுதி

பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 202 இடங்களை கைப்பற்ற, இந்தியா கூட்டணி வெறும் 34 இடங்களையே பெற்றது. எதிர்பாராத இந்தத் தோல்வி காங்கிரஸ் நிர்வாகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் முடிவின் காரணங்களை காங்கிரஸும் அரசியல் விமர்சகர்களும் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது அறிக்கையில், இந்தியா கூட்டணிக்கு பீகாரில் வெற்றி வாய்ப்பு அதிகம் என நாடு முழுவதும் கருதப்பட்டதையும், ஆனால் எவரும் எதிர்பார்க்காத வகையில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதையும் குறிப்பிட்டுள்ளார்.

பீகாரில் 33.76% மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கிறார்கள்; 64% குடும்பங்களுக்கு மாத வருமானம் ₹10,000-க்கும் குறைவு. வேலைவாய்ப்பு இன்றி தவிக்கும் நிலை 10.8% வரை உயர்ந்துள்ளது. மூன்று கோடி மக்கள் தமிழகம் உட்பட தெற்குத் மாநிலங்களுக்கு குடிபெயர்ந்து பிழைப்பது நிலைமை மிக மோசம்தான் என்பதை காட்டுகிறது. இத்தகைய பின்னடைவுகளை உருவாக்கிய பாஜக கூட்டணிக்கே மக்கள் அதிக ஆதரவு கிடைத்தது சந்தேகத்திற்குரியதாக இருப்பதாக அவர் கூறினார்.

செப்டம்பர் மாதத்தில், தேர்தல் விதிமுறைகள் அமலில் இருந்தபோதும், 1.21 கோடி பெண்களுக்கு தலா ₹10,000 வழங்கப்பட்டதை செல்வப்பெருந்தகை “தெளிவான லஞ்சம்” எனக் குற்றம்சாட்டினார். இதற்கு காங்கிரஸ் புகார் செய்தபோதும், தேர்தல் ஆணையம் தடை விதிக்காதது சந்தேகம் எழுப்பும் நடவடிக்கையாகும் என அவர் கண்டித்தார்.

வாக்கு சதவிகிதம் மற்றும் இடவசதி விநியோகமும் கேள்விகளை எழுப்புகிறது. பாஜக 20.6% வாக்குகளுடன் 89 இடங்களை, ஜேடியூ 20.3% வாக்குகளுடன் 85 இடங்களை வென்ற நிலையில், 23% வாக்குகள் பெற்ற ஆர்.ஜே.டி 25 இடங்களையே வென்றது தேர்தல் செயல்முறையின் மீது சந்தேகத்தை அதிகரிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, கடந்த மூன்று பெரிய தேர்தல்களில் திமுக-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றிருப்பதை நினைவுபடுத்திய அவர், மாநில மக்கள் மதச்சார்பின்மை, சமூகநீதி, வளர்ச்சி ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் இந்தியா கூட்டணியை உறுதியாக ஆதரித்து வருவதாக கூறினார்.

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு எதிரான வாக்குகள் அ.தி.மு.க., பாஜக, தமிழக வெற்றி கழகம், நாம் தமிழர் கட்சி போன்ற கட்சிகளுக்குள் பிளவுபடும் நிலையில், தமிழகத்தில் இந்தியா கூட்டணி மீண்டும் வெற்றி பெறுவதை எந்த சக்தியும் தடுக்க முடியாது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *